Tuesday 10 March 2015

படித்ததில் பிடித்தது : தேரா மன்னா செப்புவ துடையேன்



20. வழக்குரை காதை
தேரா மன்னா செப்புவ துடையேன் 
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்


அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் 
பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை யாகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்

சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு 
என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
கண்ணகி யென்பதென் பெயரேயெனப்; 


விளக்கம்

தேரா மன்னா - ஆராய்ச்சியில்லாத அரசனே;

சேப்புவது உடையேன் - நின்பால் கூறவேண்டிய குறை ஒன்றுடையேன் காண் யான்;

எள் அறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள் உறு புன்கண் தீர்த்தோன் அன்றியும் - சிறிதும் இகழ்தற்கிடனில்லாத சிறப்பினோடே விண்ணவர் தாமும் வியந்து புகழும்படி ஒரு புறாவினது மிக்க துன்பத்தினைத் தீர்த்தருளிய சிபி என்னும் செங்கோல் வேந்தனும் அவனல்லாமலும்;



வாயில் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத் தான்தன் பெறல் அரும்புதல்வனை ஆழியின் மடித்தோன் - அரண்மனை வாயிலிற் கட்டிய ஆராய்ச்சி மணியினது நடுவில் அமைந்த நாக்கு அசையும்படி ஓர் ஆவானது அசைத்து ஒலித்த அளவிலே விரைந்து அங்குச் சென்று அம்மணியை அசைத்த ஆவினது கடைக்கண்ணினின்றும் ஒழுகுகின்ற துன்பக் கண்ணீர் தனது நெஞ்சினைச் சுடுதல் பொறாது அதற்குற்ற குறையை அறிந்தோர்பால் ஆராயந்துணர்ந்து அதற்கிழைத்த குற்றத்திற்கு முறை செய்வான் பெறற்கரும் செல்வமாகிய தன் ஒரே மகனைத் தன் தேராழியின் அடியிற் கிடத்திக் கொன்ற செங்கோல் வேந்தனாகிய மனு நீதிச் சோழன் என்பானும் அருளாட்சி செய்த;

 பெரும்பெயர் புகார் - பெரிய புகழ் படைத்த பூம்புகார் என்னும் நகரங்காண்; என் பதி -யான் பிறந்து வளர்ந்த இடமாகும்;



யான் அவ்வூர் ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருந்குடி மாசாத்து வாணிகன் மகனை ஆகி- அம்மூதூரின்கண் பிறரால் எட்டியும் சுட்டியும் பழி கூறப்படாத பழஞ்சிறப்பினோடு திகழும் வாணிகர் குடிகளுள் வைத்து வண்மை காரணமாக எழுந்த தனிப்பெரும் புகழ் திசையெலாம் சென்று திகழ்தலையுடைய கொழுங்குடிச் செல்வனாகிய பெருங் குடியிற் பிறந்தவனும் மாசாத்துவான் என்னும் இயற்பெயரோடு மன்னனால் வழங்கப்பட்ட இருதிதிக் கிழவன் என்னும் சிறப்புப் பெயரையு முடையவனும் ஆகிய வணிகனுடைய ஒரே மகனாகப் பிறந்துவைத்தும்;

ஊழ்வினை துரப்ப வாழ்தல் வேண்டி - எமது பழவினை செலுத்துதலாலே எங்குலத் தொழில் செய்து நன்கு வாழ்தலை விரும்பி;

சூழ்கழல் மன்னா - சுற்றிக் கட்டிய வீரக் கழலையுடைய மன்னனே;

நின் நகர்ப் புகுந்து - உனது கோநகரமாகிய இம் மதுரையின்கண் புகுந்து;

இங்கு என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி - இவ்விடத்தே அத் தொழிலுக்கு முதலாக என்னுடைய காற் சிலம்புகளுள் ஒன்றனை விற்றற்கு வந்து;


நின்பால் கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி - உன்னாலே கொலைக்களத்தின்கண் வெட்டுண்டு ஒழிந்த கோவலன் என்பவனுடைய மனைவியாவேன் காண்;

என் பெயர் கண்ணகி என்பது என - என்னுடைய பெயர் கண்ணகி என்பதுகாண் என்று கூறா நிற்ப, என்க.

நன்றி தினமலர் [http://temple.dinamalar.com/news_detail.php?id=8335]


10 comments:

  1. If you like it please comment

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி. நன்றாக உள்ளது. இதனைப் படிக்கும்பொழுது நான் தமிழ் ஒப்புவித்தல் போட்டிக்ககாக இப்பாடல் பகுதியை மனனம் செய்தது நினிவிற்கு வந்தது.

    ReplyDelete
    Replies
    1. நானும் தான் இதில் பரிசும் கிடைத்தது

      Delete
  3. தமிழ் தான் ஆனால் தமிழன் எனக்கு விளங்க வில்லை. வழக்கத்தில் உள்ள தமிழ் அப்படி தமிழிற்கே தமிழில் பொருள் எழுத வேண்டி உள்ளது. எப்படி ஒரு மொழி அழிந்து இப்படி மாற்றம் கண்டது.

    ReplyDelete
  4. அருமை விளக்கத்துடன் உள்ளது
    நன்றி!!

    ReplyDelete